My Blog List

Saturday 21 April 2012

ஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்



 திருமுருகன் காந்தி & சார்லசு அன்ரனி
Bottom of Form
தேசிய இனப்பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது தோழர் ஸ்டாலின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுவார்.
கடந்த இருபது வருடங்களாக தேசியப்பிரச்சனை அநேக முக்கிய மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது, இரண்டாவது அகிலத்தின் காலத்திய தேசிய இனப்பிரச்சனையும், லெனினிய காலத்திய தேசிய இனப்பிரச்சனையும் ஒன்றே அல்ல. பரிமாணத்தில் மட்டுமல்லாமல் அவற்றின் உள்தன்மையிலும் அவை தீர்க்கமாக வேறுபட்டுள்ளன. (120)
இரண்டாவது அகிலத்தின் காலத்திற்கும் தோழர் ஸ்டாலின் சொல்லும் பேராசான் லெனினின் காலத்திற்கும் இடையே குறைவான ஆண்டுகள் இடைவெளியே இருந்தாலும் அதற்குள்ளாக தேசியப் பிரச்சனை பற்றிய புரிதலில் மற்றும் அதுபற்றிய உரையாடலில் ஏற்பட்ட பாரதூரமான மாறுதல்களைப் பற்றி அவர் பேசுகிறார். எனவே இயக்கவியல் விதிகளின்படி பார்த்தோமானால் தேசியப் பிரச்சனை என்பதும் அதற்கான போராட்டத்திற்கான செயலுத்திகளை வகுப்பது என்பதும் மாறாத ஒன்றல்ல. மாறாக அது பருண்மையான சூழல்களுக்கேற்ப பருண்மையான செயலுத்திகளை வேண்டுகிறது. தொடர்ச்சியாக போராட்டத்திற்கும் மற்றும் போராட்டத்தை முன்கொண்டு செல்லும் அமைப்பிற்கும் செயலுத்திகளைப் பற்றிய பிரக்ஞையும் அதை நீண்டகால நோக்கில் முன்னெடுப்பதும் மிகவும் முக்கியமானது. சரி இப்போது நாம் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு ஈழப்பிரச்சனையைப் பார்ப்போம். ஈழத்தின் நான்காம்கட்டப்போர் கொடூரமான முறையில், ஈழ தேசியப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ராணுவத் தலைமையை மாபெரும் பின்ன்டைவிற்குள்ளாக்கியதோடு அதன் கட்டளைத் தலைமையையும் பாரதூரமான அளவில் சிதைத்துள்ளது. பேராசான் மாவோ சொன்னதுபோல் மக்களுக்கு படை எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் பருண்மையாக உணரும் காலமிது.
நம்மிடையே போராட்டத்தை முன்னின்று முன்புபோல் எடுத்துச்செல்ல ஒரு ஒற்றைத் தலைமையோ மற்றும் அதற்கு துணையாக ஓர் ஆயுதங்தாங்கிய மக்கள் படையோ இன்று இல்லை. மாறாக நம் போராளிகளில் பலரும் மற்றும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் வதைமுகாம்களில் இன்னும் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் வாழக்கூடிய பரந்தளவிலான உழைக்கும் மக்களுக்கு முக்கியமாக தமிழ் மக்களுக்கு ஈழ விடுதலைக்காக போராட முன்வந்த அம்மாபெரும் போராளிகளையும் அவர்களோடு உடனிருந்த அந்த அப்பாவி மக்களையும் உடனடியாக இலங்கை சிங்கள இனவெறி அரசின் வதைமுகாம்களில் இருந்து மீட்டெடுக்கும் தேவையும் கடமையும் உள்ளது. அதேபோன்று நயவஞ்சகத்தினாலும் துரோகத்தினாலும் பன்னாட்டு சதிகளாலும் கொல்லப்பட்ட மாவீரர்களின் மரணத்திற்கு நியாயம் கேட்கவும் மனிதாபிமானமற்ற முறையில் ஓர் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களின் மரணத்திற்கு நியாயம் கேட்கும் கடமையும் அத்தகைய இனப்படுகொலையாளர்களை உலகின் முன்பு நிறுத்தி அவர்களுக்கான ஊழியத்தை வாங்கித்தரும் பொறுப்பும் கடமையும் அனைத்துலக உழைக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் உண்டு.
இரண்டாவதாக பேசப்பட்ட விடயங்கள் நம் உடனடிக்கடமைகளாக இன்று நம் முன்பு நின்றாலும் நமது மூலவுத்தி ரீதியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனையான தமிழர்களின் தாகமான தமிழீழத்தாயகத்தை நாம் என்றும் மறந்துவிடமுடியாது. நமது ஒவ்வொரு உடனடிக் கடமைகளைத் தீர்க்க முன்வைக்கப்படும் செயலுத்திகள் நீண்டகால தேவையான மூலவுத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவி புரிவதாகத்தான் இருக்கவேண்டும். இதையே பேராசான் மாவோ தனது முரண்பாடுகள் பற்றி என்ற கட்டுரையில் தெள்ளத்தெளிவாகக் கூறுவார். அதேநேரத்தில் நமது உடனடித் தேவைகளில் ஒரு சிலவற்றை தீர்த்துவைக்க ஏகாதிபத்திய அரசுகள் முன்வரும்போது ஒரு கண்ணால் நாம் அதை வரவேற்கவும் மறுகண்ணால் அதை சந்தேகிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இன்று நமது உடனடித் தேவையான இனப்படுகொலையாளர்களை தண்டிப்பது மற்றும் போராளிகளையும் இன்னபிற அப்பாவி மக்களையும் விடுவிப்பது பற்றி அய்நாவின் அறிக்கை பேசி வருவது மகிழ்வைத் தருவதாக இருந்தாலும் அந்த உடனடிக் கடமையே நமது மூலவுத்தி ரீதியிலான பிரச்சனையான தனித்தமிழீழத்தை அடைய உதவாது.
அதுபோக அய்.நா. பற்றி இந்திய பொதுவுடமைக்கட்சி(மாவோவியர்) அன்றைய நேபாள பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்) எழுதிய திறந்த மடல் மிகவும் பயனுடையது, உபயோகமானது. அதில் நேபாள மாவோவியர்கள் தமது ஆயுதத்தையும் மற்றும் அன்றைய ஞானேந்திரா அரசுக்கும் மாவோவியர்களுக்கும் இடையேயிலான போர்நிறுத்தத்தை பார்வையிட அதுபற்றி கண்காணிக்க அய்நாவின் நாட்டாமைக்கு அனுமதி வழங்கியபோது அதுபற்றி அன்றே இந்திய மாவோவியர்கள் எச்சரித்தார்கள். அவர்களின் அய்நா பற்றிய எச்சரிக்கை நேபாள மாவோவியர்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் போராடக்கூடிய அமைப்புகளுக்கும் இன்றியமையாதது. ஏனெனில் அய்நாவின் பிறப்பின் மூலம் அப்படிப்பட்டது. ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் தேவையில்லை என்பது போல அய்நாவின் ஏகாதிபத்திய சார்பு என்பதும் அது ஏகாதிபத்தியங்களின் நீட்சி என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. இப்படிப்பட்ட பின்னணியில்தான் நாம் அய்நாவின் தற்போதைய அறிக்கையையும் தமிழீழ மீட்புப்போருக்கான செயலுத்திக்கான செயல்பாடுகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அதுபோக இந்த அய்நா அறிக்கையினை பல ஏகாதிபத்திய நாடுகள் மிகத் தீவிரமாக ஆதரிப்பதும் நமக்கு மகிழ்வையன்றி மாறாக சந்தேகத்தையே தரவேண்டும்.
அய். நா அறிக்கையினை வைத்துக்கொண்டு தனது பிராந்திய நலனை வலுப்படுத்திக்கொள்ள வல்லரசுகள் முயற்சிப்பது தமிழீழ விடுதலையை மேலும் தள்ளிப்போட அல்லது மறுப்பதற்கான முயற்சியை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்துவதும் அதிலும் முக்கியமாக தனது பசிபிக் கட்டளை கடற்படைக்கு வலுவான ஒரு தளத்தினை உருவாக்கும் அமெரிக்காவின் 30 ஆண்டுகால் முயற்சியின் வெற்றியின் இறுதி கட்டத்தினை நாம் பார்க்கிறோம். புலிகள் இருக்கும் வரை தனது பிராந்திய கனவான திரிகோணமலையை வசப்படுத்துவதும் இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறாது என உணர்ந்த அமெரிக்க அரசு புலிகளை இலங்கை அரசினை கொண்டு வீழ்த்தியதை பல்வேறு தகவல்கள் நமக்கு உறுதி செய்கின்றன.
அதுபோக இங்கு இந்தியாவின் பங்கு தூய்மையான தன்னலமானது. எப்படி தேசியத்தலைவர் தோழர் பிரபாகரன் 1993 ஆம் ஆண்டு தமது மாவீரர் உரையின்போது “உலகின் ஒவ்வொரு நாடுகளும் தமது சொந்த நலன்களையே முன்னிறுத்துகின்றன, ஒரு நீதிசார் சட்டமோ அல்லது மக்களின் உரிமையோ அல்லாமல் பொருளாதார மற்றும் வணிக நலன்களே இன்றைய உலகின் ஒழுங்கை தீர்மானிக்கின்றன“ என்று சொன்னாரோ, தேசியத்தலைவரின் வார்த்தைகளை காலம் நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை என்று நிரூபித்திருக்கிறது. தேசியத்தலைவரின் வார்த்தைகளை மனதில் இருத்திக்கொண்டு நாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையையும் ஆராய்ந்தோமென்று சொன்னால் அமெரிக்க மட்டும் இந்தியா தேசிய இனங்களுக்கெதிராக தமது நிலைப்பாடுகளை பல தசாப்தங்களாக கைக்கொண்டு வந்ததை நாம் அறிந்து கொள்ளலாம்.
போலி இடதுசாரிகளால் கோமணத்திற்குள் சோசலிசத்தை ஒளித்து வைத்திருந்தாக கருதப்பட்ட அந்த டுபாக்கூர் சோசலிஸ்ட் நேரு தேசிய இனங்களின் நலன்களுக்கெதிரான இந்தியாவின் கருத்துக்களை முன்பே எடுத்துரைத்துள்ளார். அதுபோக அவர் ஒரு பரந்த இந்தியாவையும் ஆசியாவில் மிகப்பெரிய வல்லரசாக இந்தியா உருவாக்கும் கனவையும் முன்வைத்திருந்தார். அந்த பரந்த வல்லரசு இந்தியா என்பது அண்டையிலுள்ள் சின்னஞ்சிறு நாடுகளையும் அடக்கி ஒடுக்கி உள்ளடக்கியதுதான் என்பது பற்றி நாம் சொல்லித் தெரியவேண்டிதில்லை. எனவே இந்தியா என்பது என்னவோ இந்திராவின் காலத்தில் ஈழத்திற்கு ஆதரவாக இருந்தது என்றும் பின்பு வாயில் விரலை வைத்தால் கடிக்கத்தெரியாத ராசீவை சில மலையாளிகள் சேர்ந்து ஈழத்திற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்பதும் கவைக்குதவாத கற்பனையே, அது மட்டுமன்றி இதுபோன்ற இயக்கவியல் பார்வையற்ற செயல்பாடுகள் நமக்கு ஈழ விடுதலையைப் பெற்றுத்தரா.
அதுமட்டுமன்றி இன்று தரகு முதலாளிகளாக இருந்துகொண்டு நாட்டை அமெரிக்க ஏகபோக கம்பெனிகளுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய பெருமுதலாளிகளும் ஒருகாலத்தில் மொழிவாரி மாநிலங்கள்கூட அமைவதை எதிர்த்து நின்றார்கள் என்பதும் தெள்ளத்தெளிவான உண்மை. இதற்கு உதாரணமாக மொழிவாரி மாநில மறுசீரமைப்பிற்கு அகில இந்திய மார்வாரி கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை எடுத்துக்கொள்ளலாம். அதுபோக இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை என்பது எப்போதும் தேசிய இனங்களுக்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இந்தியாவின் தனது அண்டை நாடுகளை மற்றும் வங்காளதேசம் மற்றும் ஈழம் போன்ற தேசிய இனப்பிரச்சனைகளை தனது விரிவாக்க கனவோடும் தனது பெருமுதலாளிக்க்ளுக்கான விரிந்த சந்தைக் கனவோடும்தான் அணுகி வந்திருக்கிறது என்பதற்கு பலகோடி சான்றுகள் வரலாறு முழுவதும் மலிந்து கிடக்கின்றன. இதை பின்வரும் நேருவின் வார்த்தைகள் நன்கு விளக்கும்.
“நவீன உலகில், ஆசியாவின் மையப்பகுதியாக இந்தியா இருக்கவேண்டியது தவிர்க்க முடியாத்தாகத் தோன்றுகிறது. (இதில் பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும், கிழக்கு ஆப்பிரிக்காவும்கூட அடங்கும்)... ஒரு மாபெரும் கூட்டமைப்பின் மையமாக இந்தியா விளங்கப்போகிறது."
"இந்தியப்பெருங்கடல் பிரேதேசத்தை அரசியல், பொருளாதாரரீதியில் மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது."
"சிலோனும் (இன்றைய இலங்கை) இந்தியாவின் ஒரு பகுதிதான். இந்தியக்கூட்டமைப்பின் சுயாட்சி பெற்ற அலகாக அது இருக்கவேண்டும்."
மேலே நாம் கொடுத்துள்ள இந்த விரிவாதிக்க வாந்திகளை எடுத்தது நமது ‘சோசலிச‘ நேருதான். அதுமட்டுமன்றி அவர் தேசிய இனங்களைப் பற்றியும் அருவருப்பான பிற்போக்கு எண்ணங்களை வைத்திருந்தார் என்பது அவரின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மலிந்து விரவிக்கிடக்கிறது. அதுபோக சோசலிச முகாமும் முக்கியமாக அதன் தலைமை பீடமாக இருந்த சோவியத் ரசியாவும் வீழ்ச்சியடைந்த பின்பு இந்தியா அமெரிக்காவின் அடிவருடியாக தெற்காசிய பிராந்தியத்தில் வலம்வர தொடங்கியது. அமெரிக்காவின் குரலாக தன்னை வரித்துக்கொண்டு அவர்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்த ஆரம்பித்தது. அதுபோக தேசிய இனத்திற்கெதிரான முக்கியமாக ராசீவின் மரணத்திற்குப்பிறகு தமிழர் விரோத, தமிழீழ விரோத எண்ணங்களை தமது அமெரிக்க விசுவாசத்திற்கும், தனது தரகு முதலாளிகளுக்கும் ஆதரவாக செயல்படுத்த ஆரம்பித்தது. அமெரிக்காவின் இந்த திட்டத்தினுடனேயே இந்தியாவின் களத்துணைகொண்டு இந்த இனப்படுகொலையை நடத்தியது. இலங்கையே விரும்பாமல் இருந்திருந்தாலும் இந்தப் போர் நடந்தே இருக்கும்.
அதேநேரத்தில் இனப்படுகொலைக்கான போர் முடிவுற்றதும் விடுதலைப் புலிகளை வீழ்த்த பெரிதும் பயன்பட்ட இராசபக்சே தற்போது முழு அதிகாரத்துடன் இலங்கையை வசப்படுத்துவதும், சீன நலன்கள் முன்னுக்கு தள்ளப்படுவதும் விரும்பாத அமெரிக்கா புலிகளை ஒடுக்க பயன்படுத்திய பிறகு ராசபக்சேக்கள் தேவையில்லை எனும் நிலையை எடுத்து இருக்கிறார்கள். அதாவது இராசபக்சேவை தண்டிப்பது அவசியம் ஏனெனில் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பல குற்றம் புரிந்தார்கள்; அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்; அதுவே பலிகொடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அளிக்கப்படும் நீதி எனும் வாதம் முன்வாசல் வழியாக நமக்கு வைக்கப்படுகிறது. பின் வாசல் வழியே அமெரிக்காவின் இராணுவ நலனும், இந்தியாவின் தரகுமுதலாளிகளின் வர்த்தக நோக்கமும் மட்டுப்படுத்தப்பட்ட சீனாவின் ஊடுருவலோடு வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே மனித உரிமை மீறல்கள் மட்டுமே பேசப்பட்டு விடுதலை கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டதை நாம் இங்கு காண்கிறோம். மனித உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதானால் புலிகளின் மீதும் சில அவதூறுகளை வைப்பதன் மூலமாக விடுதலைப் போரை நடத்திய தமிழர் பிரதிநிதிகளான அந்த தியாகப் போராளிகளை குற்றவாளிகளாக மாற்றிவிட்டு, அந்த போராளிக்குழு எந்த அடிப்படை காரணத்திற்காய் தமிழர்களின் ஆதரவோடு தமிழர்களுக்காகப் போராடியதோ அந்தக் காரணத்தை பின்னுக்கு சுலபமாகத் தள்ளிவிடலாம். சுருக்கமாக பார்த்தால் “இராசபக்சே தண்டிக்கப்படலாம்; ஆனால் தமிழர்களுக்கு விடுதலைத்தமிழீழம் இல்லை” என்பதே. இதற்கான காரணங்களாய் ஏராளமான ஆதாரங்களை நாங்கள் வைக்கமுடியும்.
அய். நாவிற்கான நிபுணர் குழு போரில் இலங்கை புரிந்த குற்றங்களை மிகச்சரியாக பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுபட்ட இலங்கை அரசின் நீதி பரிபாலனைகளுக்கு ஏற்ப நடைபெறுமாவெனில் அதற்கான சாத்தியப்பாடும் இருக்கிறது. அதாவது இராசபக்சே தூக்கி ஏறியப்பட்டு அந்த இடம் வேறொரு தலைமை மூலம் நிரப்பப்பட்டு அது இந்த விசாரனையை மேற்கொள்ளலாம். புதிய இலங்கை அரசானது போர்க் குற்றவாளிகளாக சிலரைப் பிடித்து விசாரணையை சர்வதேச கண்காணிப்புடன் நடத்தி பின் தண்டிக்கும். மேலும் தமிழர்களுக்கு வழங்கப்படும் நீதியாக “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு இலங்கை அரசே முன்வந்து தமிழர்களுக்கான நீதியை பேரினவாதத்தை எதிர்கொண்டு நடத்தி காட்டும்.” இதை நடத்திக் காட்ட தோதாக ஒரு வரதராசப்பெருமாளை இந்தியா முன்னிருத்தலாம்.
நேர்மையான சுயஇராணுவ துணையற்ற தமிழர்களுக்கு ஒரு பொம்மை தலைவரை வைப்பதன் மூலம் திரிகோணமலையிலும் இதர கிழக்கு கடற்கரையிலும் அமெரிக்கா தனது கப்பற்படைக்கான கடல் தளம், பொழுதுபோக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கேளிக்கை வசதிகளை அமைத்து தனது பசிபிக் கட்டளை கடற்படையை வலுப்படுத்தலாம். இந்த தமிழர்களுக்கான நீண்ட கால அரசியல் தீர்வை இந்தியா மூலம் செய்வதன் மூலம் தந்து அமெரிக்காவின் எடுபிடி இந்தியா தமிழ்நாட்டில் தமிழீழத் தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும். இதன் வழியாக காங்கிரசோ, பா.ச.கட்சியோ அல்லது ஏனைய தேசிய கட்சிகளோ தமிழர்களை தமிழ்த்தேசிய, தமிழீழ ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றி தனது ஓட்டு வங்கியாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் நீண்டகால கனவான சம்பூர் அனல்மின் நிலையம் இழுத்தடிக்கப்படாமல் இறுதி செய்யப்படும். 2007 முதல் தட்டிக்கழிக்கப்பட்டு வரும் செபா பெரு வர்த்தக ஒப்பந்தம் மிக எளிதாக கையொப்பமிடப்படும். இலங்கைக்கு நிதியுதவியாக கொடுக்கப்பட்ட 1000 கோடி ரூபாய்க்கான கட்டுமானத்திட்டங்கள் இந்திய தரகுமுதலாளித்துவ நிறுவனங்களுக்கே அளிக்கப்படும். கூடுதலாக சீனாவின் அச்சுறுத்தலையும் குறைக்க முடியும். ராசபக்சேவை மிரட்டுவதன் மூலமும், அகற்றுவதன் மூலமும் நீளும் பயன்கள் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும் அதன் ஆசிய கைக்கூலி இந்தியாவிற்கும் மற்றும் அதன் பெருமுதலாளிகளுக்கும் ஏராளம்.
பின்வரும் தகவல்களை நீங்கள் முழுமையாக படித்தபின் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இறுதியில் விவாதித்து இருக்கிறோம். தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் ஒரு நேர்மையான வெளிப்படையான ஒற்றைத் தலைமை நம் முன்னால் இல்லாத ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை நாம் முன்பே கண்டோம். நமக்குள் நடக்கும் ஆழமான விவாதமும், பகிர்வுகளும் அதன் அடிப்படையில் நடக்கும் களப்பணிகளுமே நம்மை நேர்கோட்டில் செலுத்தும் என உறுதியாய் நம்புகிறோம்.
ஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்
பயன்படுத்தியபின் தூக்கி எறியும் பழக்கம் கொண்ட அமெரிக்கா ஜியா உல் ஹக், சதாம் உசேன், அன்வர் சதாத் போன்று இராசபக்சேவும் எறியப்படலாம். ஏனெனில் பல வழிகளில் ராசபக்சே ஆபத்தானவராக, சீன ஆதரவாளராக அமெரிக்காவிற்கு தெரிகிறார். அதே போல இராசபக்சேவை தூக்கி எறிய தேவைப்படும் ஒரு வலுவான காரணமாக தமிழர்கள் இனப்படுகொலை முன்வைக்கப்படும். ஆனால் இனப்ப்படுகொலையாக இல்லாமல் போர்குற்றமாக வைக்கப்படலாம். அதாவது போர் நியாயமானது, ஆனால் அதில் நடைபெற்ற குற்றமானது மனித குல விரோதமானது எனும் வாதம் மிகச் சன்னமாக வைக்கப்படுகிறது. இதை அமெரிக்காவின் இராபர்ட் பிளேக் நமக்கு மிக மேலும் புரிய வைக்க முயற்சி செய்கிறார். அதாவது பின் லேடனும், பிரபாகரனும் ஒன்று எனும் போது அவர் இந்தப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக நிறுவுகிறார். இலங்கை அரசின் நலனையும் உறவையும் அமெரிக்கா மேற்கொள்ளும் அல்லது கவனத்தில் கொள்ளும் எனும் போது இலங்கை விட்டுக் கொடுக்கப்ப்பட மாட்டாது எனும் குறியீடு வைக்கிறார்கள்.
இதை புரிந்து கொள்ளவேண்டுமானால் சதாம் உசேனுக்கும் – குர்து இன மக்களுக்கும் நடைபெற்றதைத் திரும்பி பார்க்க வேண்டும். குர்து இனமக்கள் தனது இனவிடுதலைக்காக போராடினார்கள், அதன் காரணமாக ஈராக்கில் சதாம் உசேனாலும், ஈரானிய அரசாலும், துருக்கிய அரசாலும் ஒடுக்கப்படுகிறார்கள். வடஈராக்கில் உள்ள குர்து இன நகரில் சதாமின் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து வழக்கு தயாரிக்கப்பட்டது. இதில் 144க்கு சற்று அதிகமான குர்து மக்களைகொன்ற வழக்கில் சதாம் விசாரிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டார். இந்த வழக்கின்போது குர்து இனமக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பது போன்ற மாயை அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும். இதுபோன்ற நியாய இறக்குமதிகளை அமெரிக்கா பல நாடுகளுக்கு செய்திருக்கிறது.
அதே போன்றதொரு நிலையே இங்கும் இன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் நடைபெறலாம். இராசபக்சே தண்டனை பெறலாம் அல்லது சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் போல மேற்குலத்திற்கு தேவையான எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பகிர்ந்து அளித்துவிட்டு தனது தலையை காப்பாற்றிக் கொள்ளலாம். (ஆனால் தனித்தமிழீழத்தை பிரித்துகொடுப்பது என்பது இந்தியாவின் அடிமடியில் கைவைப்பதுபோல். ஏனெனில் இந்தியாவைப் பற்றி பேராசான் கார்ல் மார்க்சு கூறும்போது "இந்தியாவின் அரசியல் ஒற்றுமை ஆங்கிலேயர்களின் கத்திமுனையில் புகுத்தப்பட்டதுதான்" என்று கூறினார். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிற்கு தனித்தமிழீழம் தனது கால்களுக்குகீழ் அமைவது என்பது யானையின் காதுக்குள் எறும்பு சென்ற கதைதான்). எனவே தனது அமெரிக்க எசமானனிடம் எதையும் அடகு வைத்து ஈழவிடுதலையை தடுக்க இந்தியா தயாராகவே இருக்கும். எனவே அமெரிக்க மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்களின் கருணைமழையால் தமிழீழம் என்பது இலவம் பஞ்சு பழுக்க தமிழ்க்கிளிகள் காத்திருக்கும் கதைதான்.
இதே போல தமிழர்களுக்கு மேற்குலகம் முன்வைக்கும் ஒரு தீர்வை ஒத்துக் கொண்டு, மிக முக்கியமாக மேற்குலனின் நலனை கவனத்தில் கொண்டு, இராசபக்சே நடந்து கொள்ளும்போது எல்லாம் சரியாகலாம். தமிழர்கள் அனைவருக்குமான அப்பம் அளிக்கப்பட்டுவிடும், அதில் தமிழர்களுக்கு தமிழீழம் மட்டும் இருக்காது. கிடைப்பதை பெற்று நிறைவுறும் கோடாரிக்காம்பு குழு ஒன்று உலகின் மிக முக்கிய, பெரிய செய்தி தொலைக்காட்சிகளில் தமிழர்களுக்கு கிடைத்த நலனை பூரிப்புடன் விளக்கி நன்றி பாராட்டுவார்கள். பி.பி.சி யும், லே மாண்டேவும், சி.என்.என்னும், ஏன் சின்ஹுவாவும் கூட வழிமொழியும். அதற்கான அனைத்து ஒத்திகைகளும் இப்போது நடைபெறுவதை நாம் காண்கிறோம். இவ்வாறு வைக்கப்படும் தீர்வை அரசியல் சக்தியாக மூன்று இடங்களில் பிரிந்து இருக்கும் தமிழ் சமூகமாகிய தமிழீழத் தமிழர்களின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழர்களின் பலம் பொருந்திய பகுதியாக பார்க்கப்படும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் தமிழர்களின் தலைவியாக செயலலிதாவும் முன் நிறுத்தப்படுவார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழமே தீர்வு என உறுதியாக இருக்கும் சக்திகள் அந்தந்த நாடுகளால் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். (இதை நாம் இப்போது காணமுடிவதாக உள்ளது). நேர்மையானவர்கள் தவிர்த்து ஒரு பொம்மைத் தலைவரை மேற்குலகம் முன்னிறுத்துவார்கள் அல்லது முன்னிருத்தப்பட்ட தலைவரை பணிய வைப்பார்கள். இந்தியா செயலலிதாவின் பின்னணி சக்தியாக காய் நகர்த்தும் (ஏற்கனவே தமிழீழ ஆதரவு அமைப்புகளை செயலலிதாவை முழுமையாக நம்ப வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன(செயலலிதாவோடும் அவரின் கூட்டணிக் கட்சிகளோடும் நாடாளுமன்றத்தேர்தல் சமயத்தில் நாம் போட்ட கூட்டென்பது ஒரு போர்த்தந்திர ரீதியிலானதே). இதற்கு ஏதுவாகத்தான் செயல்லிதா- இரணில் விக்கிரமசிங்கே சந்திப்பை இந்தியா உருவாக்குகிறது. இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக (எமக்கு தெரிந்து) ஒரு மாநில முதல்வரும், அண்டை நாட்டின் முன்னால் அதிபரும் அந்த நாட்டின் பிரச்சனையை பேசப்போகிற காட்சியை நாம் பார்க்கிறோம். இதற்கு பிள்ளையார் சுழியாய் இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சூரியநாரயண் ஜெயலலிதா பேசுவதற்கான பின்னணியின் கருத்துருவாக்கத்தை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறார். (இந்த காலச்சுவடு புகழ் புண்ணியவான் நீண்ட நாளைய தமிழீழ எதிரி, ஆனால் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் என அவரது நண்பர்களால் சொல்லப்படுபவர். இந்த நபர் இந்திய அதிகாரவர்க்கத்தின் குரலாக தெற்காசிய பிராந்தியத்தினை பற்றி கருத்துக்களை பதிய வைப்பவர்.) ஆக இரணில்-ஜெயல்லிதா சந்திப்பு இந்த திட்டங்களை உறுதி செய்கிறது.
இதனுடன் இராபர்ட் பிளேக்கின் தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர்களை சந்தித்ததை நாம் கவனத்தில் கொள்ளுதல் நலம். மேலும் இந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மேற்கு-இந்திய அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இராசபக்சே இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை ஜி.எல் பெரிஸ்சின் இந்திய வருகையின்போது அவர் உறுதிபடுத்தியுள்ளார். செபா பெருவர்த்தக ஒப்பந்தத்தினையும், சம்பூர் அனல்மின் நிலைய வேலைகளையும் உறுதி செய்தது அந்த சந்திப்பு. அந்த சந்திப்பின் பின்னான பேச்சுவார்த்தை குறிப்புகள் இதை உறுதிப்படுத்துகிறது. அதே வாரத்தில் தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கட்டிட நிறுவனத்திற்கு 2000 வீடுகள் கட்டும் ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது. மேலும் இதே சமயத்தில் யாழ்பாணத்தில் உயர் பாதுகாப்பு வளையத்தில் அபகரிக்கப்பட்ட நிலத்தை பசில்-ராசபக்சே தமிழர்களுக்கு வழங்கி மற்றவர்களுக்கு தான் இன்னமும் தமிழர்களுக்கான தீர்வில் உறுதியாய் செயல்படுவதாக காட்ட முற்படுகிறார். இந்த சமயங்களில் தமிழ் பிரதிநிதிகள் அதிகாரப்பகிர்வு பற்றி விரிவாக பேசுவதை கவனிக்கமுடிகிறது. மற்றும் ஆட்சி மாற்றத்தை பேசவேண்டிய அவசியம் இல்லை என இராசபக்சேவின் அரசு முணுமுணுப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அனைத்து தரப்பிற்கும் வெற்றி எனும் தீர்வாக இந்த மாற்றங்கள் நிகழும். இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதே நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்வி.
இப்பொழுது நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்க அரசால் நகர்த்தப்படும் நகர்வுகள். இதை இராபர்ட் பிளேக்கின் 2008 அக்டோபரில் சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை விரிவாக விளக்குகிறது. இதில் “கொழும்பு புலிகளை ஒடுக்குவதற்கான காலம் நெருங்கி விட்ட்து… புலிகளுக்கு பின்னான சமூகத்தில் இந்தியாவின் இலங்கைக்கான தீர்வே இறுதியானது” அதாவது தமிழர்களின் தீர்வில் இந்தியாவும்- அமெரிக்காவும் ஒன்று எனும் செய்தி தெளிவாக அவரால் உணரவைக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பின்னணியில் வேலை செய்த அமெரிக்காவினை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. இனி வரும் காலத்தில் நாம் மிகத் தீவிரமாகவும், நுணுக்கமாகவும், ராசதந்திர நோக்குடன் நமது மக்கள் போராட்டத்தையும், அதிகார வட்டத்திலான பேச்சுவார்த்தையையும் நடத்துதல் அவசியம். இவை இரண்டும் ஒரு சேர நகரவேண்டும்.
பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின்மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் தமது தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள விரும்புகிறது.

அமெரிக்காவும் தமிழீழப்போரும்


Bottom of Form
அமெரிக்காவும் இலங்கையும் - இலங்கைத்தோல் போர்த்திய அமெரிக்கா
சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்தபிறகு இந்திய அரசு தனது கடைசி சோசலிச ஏமாற்று கோமணத்தையும் கழற்றி வீசிவிட்டு அமெரிக்காவின் ஆசிய கைக்கூலியாக மாறுகிறது. இந்திய அரசு அமெரிக்காவின் கட்டுக்குள் வந்த 90களின் இறுதியில் அமெரிக்கா தனது நீண்ட நாள் திட்டமான திரிகோணமலை கப்பற்படை முகாமை அமைத்துக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்கிறது. இதற்கான அடிப்படையை 2002 ஆண்டு தனது அக்ஸா ஒப்பந்த்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை மூலமாக வைக்கிறது. 70களில் இந்திரா அரசால் கடுமையாக எதிர்க்கப்பட்டு பின்னர் இலங்கையும்-அமெரிக்காவும் உறுதியாக இருப்பது கண்டு தமிழ் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது வரை சென்றது என்பது இதே ஒப்பந்தத்தினை முடக்குவதற்காகவே. இந்த முறை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தினை பேசியபொழுது இந்திய அரசு வாய் திறக்கவே இல்லை.
9/11 இரட்டை கோபுரத்தாக்குதலை காரணமாக வைத்து பல நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. அதில் ஒன்று புலிகளை பயங்கரவாத குழுவாக சித்தரித்து அதன் மூலமாக தெற்காசியா பகுதி அரசியல் விவாதத்தினை தனக்குள் மேற்கொள்கிறது. இதன் அர்த்தம் தற்பொழுது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தனது தெற்காசிய ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தினை இலங்கையுடன் உபயோகித்து உறவு நிலையை மேற்கொள்கிறது. இலங்கை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அரசால் உயர்பதவியில் இருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் 2004 இல் இலங்கைக்கான தினசரி நடவடிக்கையை கவனிக்க நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்னதாக 2002இல் அமெரிக்காவின் இராணுவ தளபதி திமோத்தி கோர்மல்லி, கடற்படை பயணப்படையின் பிரிகேடின் தளபதி, அமெரிக்காவின் தெற்காசிய துணை அரச அதிகாரியான கிரிஸ்டினா ரோக்காவுடன் இலங்கையின் ரணில் விக்கரமசிங்கே, பாதுகாப்பு அமைச்சர் திலக் மரப்போனா மற்றும் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலாலி இராணுவ முகாமில் சந்திக்கிறார்கள். இதற்கு அடுத்த மாதம் ரகசிய பயணம் ஒன்றை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சட்ட நிபுணர் குழு இலங்கைக்கு பயணிக்கிறது. இதற்கான காரணமாக பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சிக்கான ஒத்துழைப்பு என சொல்லப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது பாகிஸ்தானில் இருக்கும் தனது தளம் ஒருவேளை அகற்றப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுமானால் ஆசியாவில் உள்ள தனது தொடர் கடற்பாதுகாப்பு தளத்தின் மையமாக இலங்கையை மாற்ற உதவும் என்று அமெரிக்கா நினைத்ததன் விளைவாக உருவானதுதான். இது அமெரிக்காவை மேலும் பலம் உள்ளதாக மாற்றும். தற்போதைய நிலைப்படி, பாகிஸ்தானுக்கு பிறகு அமெரிக்கா இந்தோனேசியாவின் மலாக்க சலசந்தியின் அருகே தான் நிலை கொண்டுள்ளது. இந்த சமயத்தில் தான் இராபர்ட் பிளேக் புலிகள் தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் தடைக் கற்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி அதற்கு புலிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதே போன்றதோரு கருத்தைத்தான் பாலத்தீனத்திலும் “பாலத்தீன தீர்விற்கு எதிராக தடைகல்லாக யாசர் அராபத் இருக்கிறார்” என்றார்கள். அதன் பின்னர் அவர் அகற்றப்பட்டார். இதே போன்றதொரு நிலையை இலங்கையில் தமிழர்களின் தலைவர்களுக்கு ஏற்படுத்த திட்டமிட்டே புலிகளின் நிதி ஆதாரத்தையும், ஆயுத ஆதாரத்தையும் அழிக்க இரு குழுக்களை ஏற்படுத்தி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, பிலிப்ப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து எனப் பல நாடுகளில் உள்ள புலிகளின் நிதி ஆதாரங்களையும் ஆயுத ஆதாரங்களையும் அழித்தார். இதுவே புலிகளின் பின்னடைவிற்கு காரணமாக இருந்தது.
மேலும் புலிகளின் கடல்வழித்தடத்தினை மறித்து ஆயுதக் கப்பலை அழிப்பதற்கு உதவியதும் இவரே. பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு அளிக்காமல் ஒருவேளை சென்றால், இந்தியாவும் அமெரிக்காவும் விட்டுவைக்காது என போர் நடந்து கொண்டு இருந்த 2009 மார்ச் மாதம் 11 ம் தேதி கொழும்புவில் தெரிவித்தார். ஆக, தலைவர் பிரபாகரனை தீர்த்துக்கட்டுவதில் வேறு எவரையும் விட அமெரிக்காவே கவனமாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் இதற்காகவே தேசியத்தலைவரின் நகர்வுகளை செயற்கை துணைக்கோள் மூலம் இலங்கை அரசுக்கு அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது (அதுபோக தோழர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டபோது இலங்கை அதிபர் ராசபக்சே புலிகளின் தலைவர்களின் மறைவிடங்கள் எங்களுக்குத் தெரியும், எங்களால் அவர்களை தேடி அழிக்க முடியும் என்று ஆணவமாக மிரட்டல் விடுத்ததிலிருந்து அமெரிக்க இந்திய உளவு நிறுவனங்கள் சோப்ளாங்கி இலங்கை அரசுக்கு அளித்த உதவிகள் இப்போது நன்றாகத் தெரியவரும்). இப்பொழுது இவரே தமிழர்களுக்கான பேச்சுவார்த்தை, தீர்வை முன்னின்று பேசுகிறார். இதுவே நமது கவலைக்குரிய ஒன்று.
ராபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு முன்பு இருந்த அனைத்து நாடுகளான துனிசியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா என அனைத்து நாடுகளிலும் (நைஜீரியா தவிர்த்து) வெற்றிகரமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது. நைஜீரியாவில் இனவிடுதலை போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அமெரிக்காவினுடய மிகச்சிறந்த அதிகாரிகளுள் ஒருவராக வெற்றிகரமாக அமெரிக்காவின் திட்டத்தை செயல்படுத்தியவராக இன்று ராபர்ட் பிளேக் திகழ்கிறார். இவரே இலங்கையின் எதிர்காலத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவராக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இவரின் திட்டம் பிற்போக்கானதாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு அய்யமேதுமிருக்கப் போவதில்லை. ஏனெனில் நாம் இவரின் தமிழர் போராட்டத்தைப் பற்றிய கருத்துருவாக்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும், "ஒசாமா பின்லேடனும், பிரபாகரனும் பயங்கரவாதிகள்.." என்று ராபர்ட் ஓ பிளேக் மே மாதம் 5ம் தேதி, 2011ல் கூறியதை மறக்கமுடியாத ஒன்று. இந்த ஒரு கருத்தே இவரின் பிற்போக்கு எண்ணத்தையும் ஏகாதிபத்திய சார்பு மனப்பான்மையும் இவர் ஏன் ராணுவரீதியாக மிகமுக்கியத்துவம் வாய்ந்த இலங்கையிலும் ஈழத்திலும் நிலைகொண்டுள்ளார் என்பதை விளக்கும்.
அமெரிக்காவும் தமிழீழப்போரும்
2002இல் அமெரிக்கா முன்னெடுத்த அக்சா ஒப்பந்தத்திற்கு பிறகு வெகு வேகமாக காய்களை நகர்த்துகிறது. இரணிலின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் நகர்வுகள் இந்தியாவின் கொல்லைப்புறத்தின் வழியே நகர்த்தப்பட்டன. இதில் முக்கியமாக அமெரிக்க அதிகாரிகளின் வருகை. வெகுகாலத்திற்கு (8 ஆண்டுகளுக்கு பிறகு) அமெரிக்காவின் ஹாப்பர் போர்க்கப்பல் ஏப்ரல் 2002இல் கொழும்பு வந்தது. இந்தியாவிற்கு தெரியாமல் திரிகோணமலையில் அமெரிக்காவிற்கு பெட்ரோலிய எண்ணை கிடங்குகளை அமைக்க இரணில் அரசு ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்றதை டிசம்பர் மாதம் 2002இல் வாச்பாயி அரசு அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியது. வாச்பாயி கொழும்புவிற்கு தூதுவர்களை அனுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியபோது ரணில் மறுத்தார்.
2004 பிப்ரவரி 8 ஆம் தேதியில் அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதர் தேவிதா சுபசிங்கே இலங்கையின் அமெரிக்க வாழ்மக்களிடத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தில் பேசும்போது அமெரிக்காவின் இலங்கைக்கான முக்கியத்துவத்தைப் பற்றி பெருமையடித்தார். அவரின் பெருமையில் உண்மை இருந்தது. அமெரிக்கா இலங்கையின் பயங்கரவாத்திற்கு எதிரான போரில் உதவும் அறிகுறியையே அவர் பெருமையாக பேசினார். அதற்கான ஆதாரமும் இருக்கவே செய்தது. அமெரிக்காவின் பசிபிக் கடற்படையின் தளபதியை அவரும், இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் (துணை கப்பற்படைத்தளபதி) தயா சந்தாகிரியும் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு இராணுவ உறவுகளை பேசி இருந்தனர். இதில் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு கருவிகள் சார்ந்த பேச்சும் நடைபெற்றது. மேலும் இலங்கையின் முத்தரப்பு தளபதிகள் அமெரிக்காவின் முத்தரப்பு தளபதிகளை சந்தித்துப் பேசி பகிர்ந்த பின்னரே இந்த தூதரின் பேச்சு அமைந்தது. அதாவது இந்தியாவிடம் இந்தியா அறியாமல் எதுவும் அமெரிக்காவிடம் பேச மாட்டோம் என கூறிய இரணில் மிகத்திறமையாக இந்திய அரசின் முதுகுப்புறத்தில் அமெரிக்காவிடத்தில் உறவுகளை உறுதிபடுத்தி இருந்தார். இதில் மிகமுக்கியமாக இலங்கை அமெரிக்க உறவுகள் கடலோரக்காவல் படையை பலப்படுத்துவதாக அமைந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் தமிழக மீனவர்கள் வேறு எப்போதையும் விட அதிக அளவில் கொல்லப்பட்டனர். இந்த அறிவிப்பு நடந்த ஒரு வருடத்தில் 21 பிப்ரவரி, 2005இல் அமெரிக்கா இலங்கைக்கு முதல் முறையாக ஒரு போர்க்கப்பலை வழங்குகிறது. இந்த வசதி மிக்க கப்பல் கடலோர பாதுகாப்பை திறம்பட செய்கிறது. இந்தக் கப்பலே பின்னர் சமுத்திரா என இலங்கையால் அழைக்கப்படுகிறது.
இதற்கு நடுவே இலங்கை அரசின் கப்பற்படை அமெரிக்காவின் கடல்படையால் பெருமளவு பயிற்சியளிக்கப்பட்ட்து. இதன் விளைவிலேயே இலங்கை தனது காலி துறைமுகத்தை காக்கவும், திரிகோணமலையில் மீதான தாக்குதலை முறியடிக்கவும் முடிந்தது, அதற்கு பின்னணியில் அமெரிக்காவின் பயிற்சி உதவியது என்பதை நாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதற்கு பின் 2006இல் அமெரிக்கா 1000 கப்பற்படை வீரர்களுடன் இலங்கையின் அம்பந்தோட்டா அருகே மாபெரும் கடற்போர் பயிற்சியை செய்தது. இந்த பயிற்சியானது விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சற்று முன்னதாக நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இது சரியாகச் சொல்லப்போனால் புலிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது.
இதற்கு இரு வருடங்களுக்கு முன்னதாக மறைந்த புலிகளின் அரசியல்பிரிவுச் செயலாளர் தோழர் சுப.தமிழ்ச்செல்வன் எரிக் சோல்ஹைமிடம் தமக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்ததை அவர் அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்து இருந்தார். இதை தனது தலைமையகத்திற்கு தெரிவித்த தொடர்பில் தூதரகம் பின் குறிப்பாக “.. இப்பொழுதுதான் புலிகளுக்கு புரிகிறது ..” எனக் கிண்டலாக அனுப்பப்பட்டு இருந்ததை சமீபத்திய விக்கீலீக்ஸ் தெரிவிக்கிறது. அமெரிக்கா தனது போர்க்கப்பலை இலங்கைக்கு கொடுத்த அதே நேரம் அய்ரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கக் கேட்ட இலங்கை அரசின் கோரிக்கையை அய்ரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதரகம் ஒப்புதல் அளித்து தனது தலைநகரான புரஸ்ஸல்ஸ்க்கு பரிந்துரைகளை அனுப்புகிறது. அதாவது அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அதே நேரத்தில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அய்ரோப்பிய ஒன்றியம் தடைசெய்கிறது; அமெரிக்கா ஒருபடி மேல்சென்று இலங்கையை போருக்குத் தயார் செய்கிறது. இதன் நடுவிலேயே துரோகி கருணாவின் பிரிவும் அமெரிக்க-அய்ரோப்பிய-இந்திய உளவு துறைகளின் உதவியால் நடைபெறுகிறது.
நவம்பர் 21, 2006இல் வாசிங்டன் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடுவத்தின் நாடுகளான ஜப்பான், நார்வே, அய்ரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இலங்கை மற்றும் புலிகளின் ஒப்பந்த மீறலைக் கண்டிக்கின்றனர். இதில் தமிழர்களின் பிரச்சனைகள் கவனமாக மறைக்கப்பட்டு இலங்கைக்கு ஆதரவான நிலையை வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் நிக்கோலஸ் பர்ன்ஸ் இலங்கை அரசின் புலிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதுடன் புலிகளை ஓரங்கட்டுகின்றனர். அதாவது புலிகளை பயங்கரவாதிகள் என அய்ரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்த பின் இது நடக்கிறது. இத்தகைய நிகழ்வுகளின் வழியாக உலக ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டிலிலுள்ள ஊடகங்கள் வழியாக புலிகள் மாபெரும் பயங்கரவாதிகள் என்ற புனைக்கதை முன்தள்ளப்பட்டு அவர்களின் நியாயமான கோரிக்கை பின்தள்ளப்படுகிறது. இதை அமெரிக்க மற்றும் இதர உளவு நிறுவனங்கள் செம்மையாக செய்து முடிக்கின்றன. முக்கியமாக இந்திய உளவுத்துறை ஒரு படிமேலே போய் களத்திலேயே நின்று வழிகாட்டியது.
வெளிநாட்டு ஆளும் வர்க்கங்களின் சதி எவ்வாறு தமிழீழத்திற்கு எதிராக செயல்பட்டது என்பதை நாம் அவர்கள் தேசியத்தலைவரின் உடல் என்று காட்டியபோது அங்கிருந்த புகைப்படக்காரர்களில் ஒருவர் வெள்ளைப்பெண்மணி என்பதிலிருந்து எந்தளவிற்கு இந்த நாடுகளுக்கு போர்க்களச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த, சராமரியாக கொத்துக்குண்டுகளை இலங்கை வீசிக்கொண்டிருந்த போர்க்களங்களில் செஞ்சிலுவைச்சங்கம் உட்பட அத்தனைபேரும் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வெள்ளைப்பெண்மணி பத்திரிக்கையாளர் எப்படி உடனடியாக அந்த உடலை புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் ஈழ எதிர்ப்பில் ஏகாதிபத்தியங்களின் பங்கென்ன என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டும்.
2004 இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவின் கைப்பாவையாக மன்மோகன் சிங் பதவி ஏற்றதும் அவர் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இந்தியாவின் கைக்கூலித்தனத்தை மிகவேகமாக நகர்த்துகிறார். இதனால் நிலைமைகள் வெகுவாக இலங்கைக்கு சாதகமாக நகருகின்றன. அமெரிக்காவால் தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை சார் நகர்வுகள் எதுவும் இந்தியாவால் கேள்வி கேட்கப்படுவதில்லை. முழுமையாக அமெரிக்கவின் மாநிலமாக மாற்றப்பட்டதைப் போல இலங்கையில் அமெரிக்காவின் எந்த ஒரு காலடிபதிவும் இந்தியாவின் கவனத்திற்கு வரமறுக்கின்றன. இந்த சமயத்தில் தான் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜெ.என் தீக்சித்திற்குப் பிறகு எம்.கே நாரயணன் நியமிக்கப்படுகின்றார். இவர் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசனின் நிதியில் செயல்படும் செண்டெர் பார் செக்யூரிட்டி அனாலிசிஸில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது இந்தப் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார். இவரே போர்க் காலத்தில் அமெரிக்க-இந்தியாவின் அச்சமான தமிழகத்தில் அதன் அரசியல்வாதிகளாலும், அரசாலும் எதிர்ப்பு வரக்கூடாது என கருணாநிதி அரசை மிரட்டி பணிய வைத்தவர். அதுபோக மிரட்டாமலே பணியக்கூடியவர்தான் கருணாநிதி என்பதை அவரின் தொடர்ச்சியான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடும், அவரின் துரோக வரலாறும், இந்திய ஆளும்வர்க்க சார்பும் நன்கு தூலமாக விளக்கும்.
அதுபோக அமெரிக்காவிற்கு அதன் துணை நாடான இந்தியாவில் அதன் மாநிலத்தில் தேசிய இனப்பிரச்சனை வரக்கூடாது எனக் கவலை. இந்திய தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிட்டத்தில் கத்தியை சொருகிக்கொண்டிருப்பது நாம் சொல்லி ஒன்றும் தெரியவேண்டியதில்லை. ஒருவேளை இந்தியா அம்மாதிரியான இனப்பிரச்சனைகளில் சிக்குவது அமெரிக்காவின் வர்த்தக நலனையும் பாதுகாப்பு நலனையும் விரிவடைந்த சந்தை பற்றிய அமெரிக்க கனவையும் இந்திய தரகு முதலாளிகளின் கனவையும் கடுமையாக பாதிக்கும். எனவே தான் தமிழகத்தை அடக்குவதற்கு எம்.கே நாரயணன் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் இந்திய தரகுமுதலாளி அரசின் பிரதிநிதியாக முயற்சி எடுத்தது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்தற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இவரின் உறுதியான தமிழின எதிர்ப்பும் இந்திய தரகுமுதலாளித்துவ அடிவருடித்தனமும் அமைந்தது. பிரதமரின் ஆலோசகராக இருந்த இவர் இந்தியாவின் ரா உளவுத்துறையின் தலைவர் ரபிந்திரசிங் அமெரிக்காவிற்கு உளவுத் தகவல்களை கடத்தியதையும் பின் அவர் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல உதவி செய்த தோம‌ர் என்பவரை அமெரிக்காவிலேயே பதவியேற்க வைத்தவர் என்பது இவர் பற்றிய கூடுதல் தகவல். இதுபோன்ற சின்னஞ்சிறு நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருந்து அமெரிக்க மிக நுணுக்கமாக தனது ஏகாதிபத்திய சார்பு காய்களை நகர்த்தியது.
இக்காலகட்டத்தில்தான் இலங்கையின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் கடல் பாதுகாப்பை கவனிக்கும் அதி நவீன ராடார்கள் பொருத்தப்பட்ட்து. இதை இந்தியாவின் பாதுகாப்பு செயலர் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ராடார்களை தெற்கு பகுதிக்கு நகர்த்திவிட்டு வடக்கில் இந்தியா அளித்த ராடார்களை நிறுவச் சொன்னார். அதனை அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கையின் கமடோர் இலங்கோகோன். இதற்கு அவரிடம் அமெரிக்கா இந்தியாவிடம் உறுதியாக இருக்கவும் என்று சொன்னதுடன் தேவைப்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி செயல்படுமாறும் அறிவுறுத்தினார். இது 2007இல் நடைபெற்றது. இந்தியாவினை சந்தித்தபோது இந்தியா அவரிடம் தனது ஆட்சேபணையை திரும்பப் பெற்றது எனச் சொல்லப்பட்டது, அவசியமெனில் இந்தியாவின் ராடார்களை அமெரிக்க ராடார் கவனிக்காத சிறு சிறு இடைவெளிப் பகுதிகளில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்து. இந்த சமயத்தில் தான் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மறிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. இதை அமெரிக்காவின் உளவு தகவல்களுடன் இலங்கை செய்து முடித்தது. இலங்கை அரசின் வார்த்தைகளில் கூறுவதெனில் புலிகளின் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல அதில் இருந்தவர்களை பற்றியத் தகவல்களும் இலங்கை அரசுக்கு அமெரிக்காவால் அளிக்கப்பட்டன. அமெரிக்கா இந்த தொண்டூழியத்தை செய்து கொண்டிருந்ததை பலமுறை புலிகளிடம் அடிவாங்கி ஓடிய சோப்ளாங்கி இலங்கை, தோழர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ததிலிருந்தே அறியலாம்.
2007, மார்ச் 5 இல் தெற்காசியாவின் மிக முக்கியமான அக்ஸா ஒப்பந்தம் அமெரிக்காவின் ராபர்ட் பிளேக்குக்கும், இலங்கையின் கோத்தபயா ராசபக்சேவிற்கும் கையெழுத்தாகிறது. அதாவது கோத்தபயா ஓர் அமெரிக்க பிரஜை, ராபர்ட் பிளேக்கும் அமெரிக்க பிரஜை. இருவரும் இலங்கைக்கான ஒப்பந்த்தில் கையெழுத்திடுகிறார்கள். இப்பொழுதும் இந்தியா அமைதி காக்கிறது. இந்த கையெழுத்திற்கிடையே இலங்கைக்கு அமெரிக்கா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்க உதவி செய்கிறது. இதற்கு அர்த்தம் அமெரிக்கா இந்த ஆயுதத்திற்கு நிதியளிக்கும் என்பது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கிடைத்த உடனடி பலன். அமெரிக்காவின் இந்த மாபெரும் உதவியை கோத்தபய ராசபக்சே கொழும்புவின் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் நன்றி பாராட்டிப் பேசுகிறார்; இதை இலங்கையின் பயங்கரவாதத்திற்கான பேராசிரியர் ரோகன் குணரத்தன அதே மாநாட்டில் உறுதி செய்கிறார்.
போருக்கு முந்தைய தயாரிப்புகளில் அமெரிக்காவின் பங்கு எத்தகைய முக்கியமானதோ அதே முக்கியத்துவம் போரின் போதும் அதற்கு பின்னர் நடைபெற்ற இனப்படுகொலையின் போதும் முக்கியத்துவமானது. இலங்கையை தனது பிடியினுள் முழுமையாக கொண்டுவந்த அமெரிக்கா தனது திட்டத்தின் கடைசி கட்டமான அமைதியாக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு போலி- ஊழல் மிகுந்த தமிழர் தலைமையின் கீழ் அமைத்து தனது கப்பல்படைத் தளத்தையும் அதனூடாக எண்ணைய்க்கிடங்கு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்களை உருவாக்கப் போகிறது. இந்த திட்டத்திற்கு தமிழீழத்தில் பொம்மை பிரதிநிதிகள், இந்தியாவில்-தமிழகத்தில் தமிழர்களால் நம்பக்கூடியவாறு ஜெயல்லிதா அரசை உருவாக்குதல், புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் கேட்கும் நேர்மையான கட்டமைப்புகளை உடைத்தல், புலித்தலைவர்களை நெருக்குதல் என பல்வேறு கட்டங்கள் நம் கண்முன் நடைபெறும்.
வேறு எங்கேயும் விட தமிழீழப்போராட்டம் என்பது பலவழிகளில், அரசியல், பொருளாதார, ராணுவரீதியில் தனித்துவம் பெற்றது. அதுபோக இது உலகெங்கிலும் ஆயுதம் தாங்கிய மக்களின் அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் உளவியலோடு சம்பந்தப்பட்டது. இப்போது ஈழத்தில் ஆயுதப்போராட்டத்திற்கு நேரிட்ட தற்காலிக அலையிறக்கத்தை, கடுமையான பின்னடைவை உலகெங்கிலும் உள்ள ஆயுதப்போராட்டங்களுக்கும் நேரப்போகும் கதியாக சில திருபுவாதிகள் முன்னெடுத்தை நாம் கண்ணுறுலாம். ருவாண்டாவைபோல இது இனக்கலவரம் அல்ல, சூடானைப்போல ஒற்றை அதிபரால் ஆளப்படும் சர்வாதிகார அரசு அல்ல. போஸ்னியா, செர்பிரினிக்காவில் நடைபெற்ற இனப்படுகொலை என்பது ஓர் இனவிடுதலை போராட்டம் சார்ந்த இனப்படுகொலை அல்ல. தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு விடுதலைப் போராட்டம். உலகின் 40க்கும் அதிகமான நாடுகளின் ஆதரவு தீர்மானத்தினைக் கொண்டுள்ள காசுமீர் போராட்டத்தினைப் போன்றதல்ல. அந்த விடுதலை போராட்டத்திற்கு சனநாயக ரீதியிலான பின்புலமாக ஒரு மக்கள் வாக்கெடுப்பும், அகிம்சை முறையிலான போராட்டமும் உள்ளது. அதுபோக சோசலிச நாடுகளும், புதிய சனநாயகப்புரட்சிகளும் முடிவடைந்துவிட்டதாகவும், இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புரட்சிக்கான புதிய பாதை ஒன்றை அனைத்து போராடும் மக்களும் கைக்கொள்ளவேண்டும் என்றும் நேபாள மாவோவியர்கள் போன்றவர்களே மார்க்சிய லெனினிய போராட்ட வழிமுறைகளை, பேராசான் மாவோவின் நீண்டகால மக்கள் யுத்தத்தை திரிக்கும்போது புலிகளின் போராட்டம் என்பதும், ஈழத்தின் விடுதலை என்பதும் வேறுவழியின்றி உலக புரட்சிகரயுத்தத்தின் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகிறது, தனிச்சிறப்புடையதாகிறது. மேலும் இந்த 2009 இனப்படுகொலைக்கு முன் தமிழர்கள் முற்றிலுமாக 2005 இல் இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணித்ததையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தின்பின் அணிதிரண்டதையும் நாம் கவனிக்க வேண்டும். இரணிலோ, இராசபக்சேவோ, சந்திரிகாவோ என யார் வந்தாலும் இந்தப் படுகொலைப் போர் நடந்தே இருக்கும். இதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தடுக்கப்பட்டதும், அமெரிக்காவின் பின்ணனியும் தமிழீழ விடுதலைப் போரின் பின்னடைவிற்கு காரணம்.
 அமெரிக்காவின் தொண்டு நிறுவனமும் போரும்
ஒசாமா பின்லேடனைக் கொல்ல எப்படி அமெரிக்கர்கள் அவர் இருக்கும் இடத்தை மிகச்சரியாக கண்டறிந்தார்கள் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கும் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. பின்லேடன் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து யார் யாரெல்லாம் அங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கண்டறிவதற்காக அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் அபோதாபாத்தில் ஒரு நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது. அதன்மூலமாக அது பின்லேடன் அங்கு இருப்பதை உறுதி செய்துகொண்டபின்பு அந்த கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலிருந்து நாம் அமெரிக்கா தொண்டு நிறுவனங்களை எந்தவொரு நிலைக்கும் பயன்படுத்தத் துணியும் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபோன்றுதான் ஈழத்திலும் அமெரிக்கா தொண்டுநிறுவனங்களை பயன்படுத்திக்கொண்டது.
2009இல் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான யு.எஸ்.எய்ட் போரில் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியும், அவர்களுக்கான உதவிகள் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டு இருந்தது. (இந்த தொண்டு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தான் செயல்பட்ட இடங்களில் ஆட்சிக்கவிழ்ப்பையும், அரசியல் நிலையற்ற தன்மையையும் உருவாக்கியது என “பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில்” அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.) புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செயல்பட்ட பெருமளவு தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு எதிரான உளவு வேலையை திறம்படச் செய்தது. இந்த தொண்டு நிறுவனம் பிப்ரவரி மாதம் இரண்டு-மூன்றாம் வார செய்தியில் முல்லைத்தீவு பகுதியில் போருக்கு நடுவே மாட்டிக் கொண்ட உள்ளூர் அகதிகள் என 70,000 மக்களே உள்ளார்கள் என தகவல் அனுப்பியதைக் காணலாம். இந்த எண்ணிக்கையை தானே இலங்கை அரசும் பேசியது, இந்தியாவின் பிரணாப் முகர்ஜியும் உறுதிப்படுத்தினார். இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை, ஏனெனில் அங்கு இருந்த மக்கள் தொகையை தமிழர்கள் மறுவாழ்வு மையமும், இலங்கை அரசின் தமிழர் பகுதி அரசாங்க ஏஜெண்டும் வேறு ஒரு கணக்கை முன் வைத்து இருக்கிறார்கள். இப்படியாக தனது சாம தான பேத தண்டங்களை அமெரிக்கா ஈழத்திற்கு எதிராக பயன்படுத்தியது. தனது பிராந்திய நலனை, ராணுவ நலனை வலுப்படுத்த அது எதுவும் செய்ய தயாராக இருந்தது. 

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்
போருக்கு பிறகான அய்.நாவின் மனித உரிமை அமர்வில் அமெரிக்கா-மேற்குலகம் சார்ந்த அரசுகள் சாராத எதிர் கூட்டணி (இக்கூட்டணியும் ஈழ ஆதரவிற்காகவன்றி தத்தமது ஆளும்வர்க்க நலனுக்கு சார்பாக உருவானதுதான்) இந்தியாவின் பெரும் முயற்சியினால் முறியடிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக கொணரப்பட்ட இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பு மற்றும் முன்னால் எதிர்ப்பு நாடுகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. இதன் மூலம் இலங்கையானது மேற்குலக எதிர்ப்பு முகமூடியை முன்வைத்து செயல்பட்டது. இந்த அடிப்படையிலேயே இலங்கையை தண்டிப்பது என்பது மேற்குலகிற்கு எதிரான ஒரு நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நகர்வுகளை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டன. இந்த வேசத்தை இலங்கை 2009இன் பிற்பகுதியில் மிகச்சிறப்பாக மேற்கொண்டது. இதைப் பற்றி கேட்டபோது இலங்கையின் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளரிடம் சொன்னதானது “அமெரிக்க எதிர்ப்பு என்பது இங்குள்ள பொதுமக்களை ஏமாற்றவே, அதாவது பார்வையாளர்களை குசிப்படுத்தவே.”.. இது பெருமளவு இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் உதவி செய்தது.
ரசியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் அணிசேரா நாடுகளின் ஆகப்பெரும் தலைவராக செயல்படும் இந்தியாவின் பின் அணிவகுத்தன. இதில் ரசியா பெரும் முனைப்பெடுத்து இலங்கை அரசைக் காத்தது. அதாவது இந்த ஏகாதிபத்தியங்களின் சடுகுடு ஆட்டத்தில் கிட்டத்தட்ட ரசியாவின் தலைமை திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட்து எனவும் கருத வாய்ப்பிருக்கிறது. ஆனால் ரசியாவிற்கு இலங்கை இரு எண்ணை தோண்டும் ஒப்பந்தமும், துறைமுகம் கட்டும் ஒப்பந்தமும் கொடுத்து அதையும் ஆறுதல்படுத்தியதையும் நினைவில் வைப்போம். தமிழர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டிய நாடுகள் நமக்கு எதிரணியிலும், தமிழர்களுக்கு எதிரான இப்போரை நடத்திய நாடுகள் நமக்கு ஆதரவான குரலை அளிப்பது போன்ற நிலையையும் இன்று காண்கிறோம். கூர்ந்து கவனித்தால், புலிகளை தடை செய்த அரசுகள் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போன்று செயல்படுகின்றன (பிரான்சு இன்று வரை கள்ளமெளனம் சாதிக்கிறது.) புலிகளை தடை செய்யாத அரசுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த சூது தமிழர்கள் பக்கம் யாரும் இல்லாத நிலையை மிகக் கவனமாக கொண்டு வந்து இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இலங்கையை காய் நகர்த்த விட்டு இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் நிலையை அடைந்து இருக்கிறது.
சீனா இலங்கையில் நுழைந்தது ரசியா-சீனா பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு(shangaai cooperation - SCO) வலுசேர்க்கும் என போடப்பட்ட கணக்கு பொய்ப்பது போன்ற சூழலை நாம் காண்கிறோம் (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது (shangaai cooperation - SCO) மேற்குலகின் நேட்டோ படைபலத்தை சமனாக்க ரசியா-சீனாவினால் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை 2009இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. இந்த கூட்டமைப்பின் மூலமும் இலங்கை ரசிய-சீன உதவிகளை தமிழ் இன அழிப்புப் போருக்கு பெற்றது. இந்தக் கூட்டமைப்பில் ஒருவேளை இலங்கை ஒரு முக்கிய பொறுப்பையேற்றால் இந்த அமைப்பானது இந்தியப் பெருங்கடலில் வலிமை பெறும்). ஆக இது போன்ற பெரும் நாடுகளின், முக்கியமாக சீனா-அமெரிக்கா, திட்டத்தையும் நகர்வையும் நாம் புரிந்து கொண்டால் நமது வருங்கால திட்டங்களுக்கு உதவலாம். ஏனெனில் அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் ஏகாதிபத்திய நலன்கள் எதிர்மறையாக தமிழீழ விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.
 இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல்சார் ராணுவப்பாதுகாப்பு
சீனா தன்னுடைய ஆப்பிரிக்க-அரேபிய முதலீடுகளையும், மூலப்பொருளுக்கான நாடுகளையும் பாதுகாக்க முத்துமாலை திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது ('இந்து' பத்திரிக்கையின் ஆசிரியர் ராம் சீனாவின் இந்த நலனை பாதுகாக்கவே தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாசிஸ்டுகள் என தமிழின விடுதலைப்போரை மனிதகுலத்திற்கு விரோதமாகவும், இந்தியாவிற்கு விரோதமாகவும் கருத்துக்களை கட்டமைத்தார். அதாவது இந்தியாவின் துணையுடன் தமிழர்களை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து வெளியேற்றுவது அல்லது அகற்றுவது. இலங்கை அரசிற்கு சீன தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என். ராமிற்கு பெரும் பங்குண்டு).
முத்துமாலைத் திட்டம் எனப்படுவது, சீனா தனது கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாக்க அதனுடைய கிழக்குமுனையிலிருந்து இந்தோனிசிய கடல், பர்மா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் வழியாக அமைத்த துறைமுகங்கள், விமானதளங்கள். பாகிஸ்தான், இலங்கை, பர்மா, பங்களாதேசம், இந்தோனேசியா, கம்போடியாவிலிருந்து சூடான் துறைமுகம், சோமாலியா என விரிவடைந்து செல்லும் சீனாவின் 'முத்துமாலை யுக்தி' நகர்வில் மிக முக்கியமான இடத்தில் இலங்கையும், தமிழீழமும் வருகிறது. மேலும் உலகின் மிகக்குறுகிய ஜலசந்தியான மலாக்காய் (Malacca), ஹோர்முட்ஸ் (Hormuz), பாப் எல் மண்டெப் (Bab el Mandeb) ஆகிய குறுகிய-கடல்சார் சிக்கல்களை சரிசெய்து பாதுகாப்பாய் நகரவேண்டிய கவலை எந்த ஒரு வல்லரசுக்கும் அல்லது வல்லரசாகும் ஆசை உள்ள நாடுகளுக்கு உண்டு. இதன் காரணமாகவே சீன அரசு இந்த பகுதிகளில் சிக்கல்களை நீக்க முறையே இந்தோனீசிய, பாகிஸ்தான், ஏமன் பகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இதற்கான கட்டுமானப் பணிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றியது. இதற்கான முயற்சிகளை மிக நிதானமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்த்தியது.
இவ்வாறான கட்டுமானம் என்பது கச்சா எண்ணெய், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், மூலப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்ல, உலகின் 70 சதவிகித வணிகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. மேலே குறிப்பிட்ட ஜலசந்தி கடல்வழியே கிட்டத்தட்ட உலகின் பாதிக்கும் மேலான கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து நடக்கிறது. இந்த வணிகப் போக்குவரத்து பகுதியே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரலாறு எங்கும் பார்க்கப்படுகிறது (ஏனெனில் இந்த இந்தோனிசியாவின் மலாக்கா ஜலசந்தியை பாதுகாக்கவே ராசராச சோழன், ராசேந்திர சோழன் கடல்படையை அனுப்பியதாக சோழப் பேரரசின் வரலாற்றில் சொல்லப்படுகிறது). இந்த குறுகலான சிக்கல் நிறைந்த பகுதிகளை கடப்பதில் இலங்கை ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக இருந்து வருகிறது. ஆக இந்த முத்துமாலைத்திட்ட்த்தில் மிகமுக்கியமான ஒன்றாக இலங்கை மாறியது. இலங்கையில் இதன் காரணமாக பெரும் முதலீடுகளை சீனா செய்ய ஆரம்பித்தது. இலங்கையின் தென்கோடி அம்பந்தோட்டா துறைமுகம் இவ்வாறே உருவாக்கப்பட்டது. எனவே இலங்கையும் தமிழீழமும் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவமிக்க பிராந்தியம் என்பதை ஏகாதிபத்திய அரசியலை கூர்மையாக கவனிப்பவ‌ர்களால் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
பேராசான் மாவோவின் தலைமையில் மாபெரும் சோசலிச அரசாக இருந்து போராடும் உலகமக்களின் போராட்டத்திற்கு தோளோடு தோள் நின்ற சோசலிச செஞ்சீனம் சமூக ஏகாதிபத்திய அரசாக திரிந்து இப்போது பட்டவர்த்தனமாக ஓர் ஏகாதிபத்திய அரசாக திரிந்துள்ளது. அரசியல் நேர்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் தனது லாப நோக்கை மட்டும் குறிக்கோளாக செயல்பட்டு வந்த அரசாக சீன அரசு செயல்படுவதை பர்மா, இலங்கை, இஸ்ரேல் முதல் சூடான் வரை நாம் காணமுடியும். இந்தியா பெருங்கடலில் பெரும் துறைமுகங்களையும், தரை-வான்வழி போக்குவரத்து தளங்களையும், கண்காணிப்பகத்தையும் நிர்மாணித்து அதன் முதுகெலும்பாய் வர்த்தக நிறுவனங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தது பேராசான் மாவோவிற்கு பிறகான சீன அரசு. உலகமயமான திறந்த சந்தைப் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் வெற்றிகரமானதோர் அரசாகத் திகழ திட்டமிட்ட நகர்வுகளே இவைகள். இந்த நகர்வுகள் வெற்றி பெறும்போது சீன அரசானது வல்லரசுகளின் கனவான “நீலநீர்” கடற்படையை கட்டமுடியும். இந்த கடற்படை வலிமை என்பது, தரைத்தள உதவி இல்லாமலே நீண்ட தொலைவு படைகளை நகர்த்து சென்று தாக்குதல் நடத்தும் திறனாகும். இந்தத் திறன் அமெரிக்காவிற்கும், ரசியா, இங்கிலாந்து, பிரான்ஸ்சுக்கு மட்டுமே உண்டு. இந்த வலிமை வரவேண்டுமானால் சீனா தனது முத்துமாலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்ற நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் கடந்த பத்தாண்டுகால நகர்வையும், இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு பின்னான அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜாஸ்மின் புரட்சியும் சீனாவும்
துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சியானது அரேபிய, பாரசீக, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்தது. விக்கிலீக்ஸும் கார்டியன் பத்திரிக்கையும் ஒரு செய்தியை வெளியிடுகிறது. அதாவது, எகிப்திய புரட்சியில் செயலாற்றிய நபர்களுக்கு 2007-2008 ஆண்டுகளில் அமெரிக்காவில் போராட்டம் நடத்துவதைப் பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டன என்பதே அது. இவ்வாறே இந்த புரட்சி அதன் ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருந்தது. அந்த ஆட்சியாளர்களின் பின்னால் இருக்கும் அமெரிக்காவை அதன் ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் உள்ளூர் ஊழலை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி மாற்றம் நடத்துவதில் குறியாக இருந்தது, இருக்கிறது. இந்த போராட்டம் எதற்காக நடக்கிறது என்று பார்த்தால் இந்த அமெரிக்காவின் கைப்பாவை அரசுகள் செளதி அரசையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசையும் விட அனைத்து நாடுகளிலும் முக்கியத்துவமான தனது முதலீட்டை சீனா செய்திருந்தது. அதாவது அல்ஜீரிய, துனீசியா, ஒமென், ஏமன் மற்றும் முக்கியமாக சூடான் என சீனா முதலீடு செய்த அனைத்து நாடுகளிலும் இந்த மாற்றம் நடக்கிறது.
இதன் சூட்டை உணர்ந்த பாகிஸ்தான், சீனாவின் மிக முக்கிய மத்திய மேற்கு ஆசியப் பங்காளியாக இருந்து ஒசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இப்படியாக சீனாவின் தற்போதைய நிலைப்பாடுகளும் அதன் முத்துமாலை திட்டத்திற்கான நடவடிக்கைகளும் அமெரிக்காவை நிலைகுலைய வைக்கிறது. இதன் தொடர்ச்சியில் முக்கியமான தொடர்புப் புள்ளியான அம்பந்தோட்டை துறைமுகம் இலங்கையில் இருக்கிறது. இலங்கைக்குப் பிறகு சீனாவின் திட்டத்தில் பர்மாவின் துறைமுகம் இருக்கிறது, பர்மாவிலும் ஓர் இனவிடுதலை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 'கரன்' எனப்படும் அந்த இனத்தின் மீதான தாக்குதலை கவனிக்க விஜய் நம்பியார் அனுப்பப்படுகிறார். விஜய் நம்பியாரின் இந்த புதிய பதவியை எதிர்க்கும் அந்த கரன் இனமக்கள் தமிழினப் படுகொலை விடயத்தில் விஜய் நம்பியாரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவரை திரும்பப் பெறச் சொல்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய நாடுகள் இதேபோல தெற்கு சூடானில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டுகொள்ளாமல், தடுக்காமல் விட்டு பின் தங்களது நலனுக்காக சூடானை இரண்டாகப் பிரிக்க உதவினார்கள். மிகப்பெரிய நியாயவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு அய்.நாவின் வாக்கெடுப்பை நடத்தினார்கள்; கச்சா எண்ணை அதிகம் நிறைந்த தெற்கு சூடான் தனி நாடாகிறது. இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அது என்னவெனில் ஈழத்தில் இனப்படுகொலையில் தொடங்கி அதன் பின்னான போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை என அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை மையப்படுத்தி செயல்படுத்தின; இனியும் செயல்படுத்தும்.
அமெரிக்காவின் “திரிகோணமலை” தாகம்
ஒருபுறம் சீனாவின் வலைப்பின்னல் அப்படியிருக்கிறதென்றால் மறுபுறம் அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆசை சீனாவைப்போல கடல்கடந்து நிற்கிறது. கடல்களின்மீதே தனது பொருளாதார மற்றும் ராணுவ நலன்களையும் கட்டி உலக வளங்களை வளைக்க அது விரும்புகிறது. அதற்காக அது மனிதகுலம் முழுவதையும்கூட பலியிட தயாராகயிருக்கிறது. இப்படியான அமெரிக்காவின் வலிமை வாய்ந்த பசிபிக் கமாண்ட் கடற்படையின் வலை திரிகோணமலை இல்லாமல் முழுமை பெறமுடியாது. அதன் வலைப்பின்னலாகிய பாகிஸ்தான், டியாகோ கார்சியா தீவு (30 போர்க்கப்பல்களும், 2000 அமெரிக்க படையினரும் கொண்டுள்ள தளமாகும்) இந்த தளத்தை அமைப்பதற்காக இங்கிலாந்திற்கு சொந்தமான அந்த தீவில் இருந்த பூர்வகுடி மக்களை தீவைவிட்டு வெளியேற்றினார்கள். அதாவது தனது பாதுகாப்பு தளத்தை அமைக்க இங்கிலாந்து-அமெரிக்க அரசு எந்த செயலையும் செய்யும் என்பதை இது உணர்த்தும். இந்த தீவைவிட மிகமுக்கியமான திரிகோணமலை துறைமுகத்தை கைக்கொள்ள அமெரிக்கா எந்தவொரு பலியிடலையும் செய்யும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவும், திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும் பங்கு போடுவதும் இதன் அடிப்படையில் தான். இதில் சீனா தனது நீல- நீர் கப்பல்படை திறனை வளர்த்தெடுப்பதற்கு முன் சீனாவின் இந்த முத்துமாலை திட்டத்தை தகர்க்க அமெரிக்க முடிவெடுக்கிறது. இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது வசமாக்கவும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும், அதற்கு முட்டுகட்டையாக இருக்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கும் மக்களும் அதனோடு அழிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் திட்டம். இது திட்டமிடப்பட்டவாறு நடத்தப்பட்டது. எவ்வாறு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பெருமளவு மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதன் மூலமாக மக்களிடமிருந்து எழும்பும் அதிருப்திகளை போராளிகளின் மீது திருப்பி அவர்களையும் மக்களையும் முடக்குவது என்பது போர் யுக்தியாக கடைபிடிக்கப்பட்டதோ அதே யுக்தி இங்கும் நடத்தப்பட்டது. புலிகள் மீது விமர்சனமாகிய 'மக்கள் கேடயமும்' இவ்வாறே உருவாக்கப்பட்டது (இங்கிலாந்து ராணுவம் இராக்கின் பாஸ்ரா நகரில் மேற்கொண்ட தாக்குதலையும், இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலையும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் வியட்நாம், இராக்கிய, யுகொஸ்லாவிய, ஆப்கானிய, சோமாலியப் போர்களையும் நீங்கள் நினைவில் கொள்ளுதல் இதுபற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும்). இதிலிருந்து யுத்தம் என்பது வெறுமனே சிங்கள இனவெறி ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடக்கவில்லை, மாறாக யுத்தம் ஏகாதிபத்திய அரசுகளையும், அவர்களின் இந்தியா போன்ற அடிவருடிகளையும், மற்றும் சிங்கள இனவெறி- தரகு முதலாளித்துவ அரசையும் உள்ளடக்கியதொரு படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேதான் நடந்தது.
இறுதியாக...
அன்புத்தோழர்களே நன்கு கவனியுங்கள், ஈழத்தின் பின்னடைவு வெறும் தமிழீழ மக்களின் பின்னடைவல்ல, மாறாக அது உலகின் அனைத்து உழைக்கும் மக்களின் பின்னடைவு. அதுபோக தற்போது ஒரு புதிய திருபுவாதம் ஒன்று நமது நேர்மையான தோழர்கள் மத்தியிலும் தலைதூக்கியிருக்கிறது. அது என்னவெனில் இனிமேல் ஈழம் நடைமுறைக்குதவாத வாதம். எனவே அதை விட்டுவிட்டு ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டியது என்பதுதான் அது. ஆனால் உலகை மிகச்சரியாக கணித்த மார்க்சியம் அதற்கு மாறாக நம்மை ஒவ்வொரு நாளும் ஓய்வு ஒழிச்சலின்றி தனித்தமிழீழத்திற்காக போராடச்சொல்கிறது, போராடச்செய்கிறது. ஈழம் போன்ற தேசங்கள் மிகச்சிறிய தேசங்களாக இருப்பதால் அதன் விடுதலை சாத்தியமில்லை, அதனால் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்துப் போராட முடியாது என்பதற்கான பதிலை பேராசான் லெனின் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார். 'பரந்துபட்ட சனநாயகத்தையும், விடுதலையையும் உறுதிப்படுத்த, தேசிய இனங்களுக்கான சுயாட்சிப்பகுதிகள்-அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்கூட உருவாக்கப்படவேண்டும்' என்கிறார் பேராசான் லெனின்.
அதேநேரத்தில் தோழர்கள் மத்தியிலே சில குழப்பங்கள் உள்ளன. அவை என்னவென்றால் விடுதலைப்புலிகளே ஆயுதங்களை மௌனிக்கச்செய்துவிட்டார்கள், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டார்கள், எனவே இலங்கையோடு நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலிகள் ஆயுதத்தை மௌனிக்கச்செய்தது ஒரு போர்த்தந்திரரீதியிலான யுக்தியே அன்றி யுத்ததந்திர ரீதியிலானதல்ல என்பதை பேராசான் லெனினின் போர்த்தந்திரங்கள் பற்றிய கடிதங்களை வாசித்தவர்கள் நன்கு தெரிந்துகொள்வார்கள். அதுபோக மீண்டும் இதுபோன்றதொரு ஏகாதிபத்தியங்களுக்கெதிரான போரில் நம்மால் வெற்றிபெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கான பதிலை பேராசான் மாவோ ஏற்கனவே கூறிவிட்டார். அது என்னவெனில் ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப்புலிகளே என்பதுதான்.
தோழர்களே நாம் ஒன்றும் பிரிவினைவாதிகளல்ல, மாறாக அனைத்து நாட்டின் மக்களோடு ஒற்றுமையையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளவுமே விரும்புகிறோம். அதுபோக நமது தனித்தமிழீழத்திற்கான போராட்டமென்பது வெறும் தமிழர்களுக்கான போராட்டமல்ல, மாறாக மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் அது சிங்களவர்களின் சனநாயகத்திற்கான போராட்டமும் கூட. ஏனெனில் ஒரு தேசிய இனத்தை ஒடுக்கும் இன்னொரு தேசிய இனம் சனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கமுடியாது என்பதுதான் லெனினியத்தின் தேசிய இனச்சிக்கல் பற்றிய அடிப்படை புரிதலே. எனவே தமிழீழத்திற்கான நமது போராட்டம் என்பது சிங்களவர்களின் சனநாயகத்திற்கான போராட்டமுமேயாகும். பெருந்தேசிய அடிப்படைவாதத்தால் முடங்கிக்கிடக்கும் சிங்கள மக்களுக்கு விடுதலைக்காற்றை சுவாசிக்கச்செய்வதற்காகவே, எம் தேசியத்தலைவர் பிரபாகரன் இந்தப் போராட்டத்தை துவங்கினார். 1970களில் சிங்கள மக்களில் சிலர் சிங்கள இனவெறி, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசிற்கு எதிராக முன்முயற்சி எடுத்து ஆயுதமேந்தி போராடினார்கள். அதன்பின்பாக உறங்கப்போடப்பட்ட அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவ அரசுக்கு எதிரான போரை எம் தலைவர் தோழர் பிரபாகரன் கையிலெடுத்துக்கொண்டார்.
அவர் ஏந்திய தேசிய இன விடுதலை என்பது வெளிப்படையாக பேராசான் லெனின் சொன்னதுபோல் “ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுவான சனநாயக உள்ளடக்கத்தைக்கொண்டிருக்கும் பூர்சுவா தேசியமாக" தெரிந்தாலும் சாராம்சத்தில் அது ஒரு ஏகாதிபத்தியத்திற்கெதிரான ஒடுக்கப்பட்டவர்களின் மாபெரும் போரே மற்றும் புலிகள் உலகப்பொதுவுடமை இயக்கத்தின் ஈழக்கிளையே என்பதை வரலாறு நான்காம் கட்ட ஈழப்போரின் பின்னணியில் காட்டியுள்ளது. தோழர்களே, பேராசான் மார்க்சு சொன்னதுபோல் நாம் பிரிந்து செல்வதென்பது ஒரு சர்வதேசிய கூட்டமைப்பை உருவாக்கத்தான், சண்டப்பிரசங்க பிரிவினைக்கான நோக்கில் அல்ல. காலம் நம் தோள்களின்மீது இந்த வரலாற்றுக்கடமையை ஏற்றியிருக்கிறது. நம்மிடம் இழப்பதற்கொன்றுமில்லை அடிமைச்சங்கிலிகளைத்தவிர, மாறாக அடையப்போவதோ சுபிட்சமான பொன்னுலகம். பேராசான் மாவோ சொன்னதுபோல் "தோழர்களே நாம் எழுவோம், நமது காயங்களை துடைத்துக்கொள்வோம், இறந்த தோழர்களை புதைப்போம், மீண்டும் போர்க்களம் செல்வோம்".
ஈழம் என்னும் வரலாற்றுக்கடமையை இளந்தோள்களில் ஏந்திக்கொள்வோம்
சிங்கள இனவெறி, தரகு முதலாளித்துவ அரசை உடைத்தெறிந்து தனித்தமிழீழம் படைப்போம்
தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்

No comments:

Post a Comment